சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

வியாழன், 1 நவம்பர், 2012

ஆசிரியர் போற்றுதும்

எடுத்துச் சொல்ல எவருமின்றி 
எழுந்து நடந்தவன் யாரிங்கே ?
அகரம் பழக்கும் கைகளின்றேல் 
ஆயுதம் முளைக்கும் பாரிங்கே 

கருவறை கழிந்து வகுப்பறை பயின்ற 
ஒருவரை உலகம் மதிக்கும் --சொல்லிக் 
கொடுப்பவர் என்ற துடுப்புகள் இன்றேல் 
தலைமுறை எப்படிச் சிறக்கும்.

ஆயுதம் தொடங்கி காகிதம் வரைக்கும் 
செய்கின்ற வேலை எதற்கும் -ஓர் 
ஆசான்  இன்றேல் ஆக்கங்கள் இல்லை 
என்பதை உலகம் உரைக்கும் 

எழுத்தறி வித்தே எழுத்தறி வித்தே 
உலர்ந்து போன மையா ?-நீங்கள் 
எழுத்தறி விக்காமல் நாங்கள் வந்தோம் 
என்ப தென்ன மெய்யா?

அரசன் என்றாலும் அரிசன் என்றாலும் 
சமநீதி உங்கள் சபையில் !-எந்த 
வர்க்க மூலத்தையும் சரிசம மாக்கும்
சமநீதி உங்கள் கையில் !

வகுப்பு வாதமும் வகுப்பு பேதமும் 
வந்து குவிகின்ற  நாட்டில் ! -உங்கள் 
வகுப்பு வாதமும் இலாத பேதமும் 
வகுத்துக் காட்டியது வாழ்க்கை 

கத்தி கொண்டே காயம் ஆற்றும் 
மருத்துவன் வேலை அய்யா !-நீங்கள் 
கத்திக் கொண்டே புத்தி புகட்டி 
கண்களைத் திறந்தது  பொய்யா ? 

வன்முறை தொலைத்து நன்முறை பிறக்க 
வாத்தியார் அய்யா வேண்டும் 
எழுத்தறி வித்த இறைவா உங்கள் 
பழுத்தறிவு என்றும் வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக